செய்திகள்
கலெக்டர் கார் மோதி கல்லூரி மாணவி காயம்
மொபட் மீது கலெக்டர் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறை மங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் கீர்த்திகா (வயது 21 ) . இவர் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் பி.எட்., கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று மாலை துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில் கீர்த்திகா மொபட்டில் சென்றார்.
சாலையை கடக்க முயன்ற போது திருச்சியில் இருந்து வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கீர்த்திகா பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, விபத்தை ஏற்படுத்திய கார் அரியலூர் கலெக்டர் ரத்னாவின் கார் என்பதும், திருச்சி சென்று கலெக்டரின் உறவினர்களை காரில் அழைத்து வரும்போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.