செய்திகள்
கோப்பு படம்

கன்னியாகுமரியில் ஓட்டலுக்குள் புகுந்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய முகமூடி கும்பல்

Published On 2019-11-16 14:20 GMT   |   Update On 2019-11-16 14:20 GMT
கன்னியாகுமரியில் ஓட்டலுக்குள் புகுந்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய முகமூடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள சுக்குப்பாறை தேரி விளையை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 30).

இவர் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10.15 மணி அளவில் இவர் தனது காரில் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா அருகே தனது காரை நிறுத்திவிட்டு அங்கு உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் அந்த ஓட்டலுக்கு வந்தனர். முகமூடி அணிந்திருந்த அந்த 3 வாலிபர்களும் தங்களிடம் இருந்த அரிவாளால் கிருஷ்ணராஜை சரமாரியாக வெட்டினார்கள்.

இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர் அலறித்துடித்தார். ஓட்டலுக்குள் புகுந்து முகமூடி கும்பல் அரிவாளால் வெட்டுவதை பார்த்ததும் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் பயந்து ஓடினார்கள். இதற்குள் அந்த முகமூடி கும்பலும் மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்று விட்டது.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த கிருஷ்ணராஜ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தப்பி ஓடிய முகமூடி கும்பலை சேர்ந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News