செய்திகள்
சூளகிரியில் தொடர் மழை காரணமாக கொத்தமல்லி வரத்து குறைவு
சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொத்தமல்லி செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
சூளகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, மருதாண்ட பள்ளி, மோதுகுள பள்ளி, கிரணப்பள்ளி, சாமனபள்ளி, அத்திமுகம், பேரிகை, உத்தனபள்ளி, அலேசீபம், மேலுமலை, காலிங்காவரம், சின்னாரன்தொட்டி, நெரிகம், கும்பளம் உள்பட பல கிராமங்களில் விவசாயிகள் கொத்தமல்லி பயிர் செய்து வருகின்றனர்.
தற்போது சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தங்களது தோட்டத்தில் விளைந்த கொத்தமல்லி செடியை அப்படியே விட்டு விடுகின்றனர். மழையின் காரணமாக கொத்தமல்லி செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சூளகிரி மார்க்கெட்டுக்கு கொத்தமல்லி வரத்து குறைந்தது. வரத்து குறைவால் கொத்தமல்லி ஒரு கட்டின் விலை ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.