மதுரையில் ரெயில்வே அதிகாரி வீட்டில் 33 பவுன் நகை கொள்ளை
மதுரை:
மதுரை கூடல்நகர் சொக்கலிங்க நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் கீதாராஜன் (வயது 54). இவர் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று கீதா ராஜன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தனர்.
பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அந்த கும்பல் வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 33 பவுன் நகை, வைர தோடு, வெள்ளி பொருட்கள் ஆகியற்றை திருடிக் கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.
ஊர் திரும்பிய கீதாராஜன் கதவு உடைக்கப்பட்டு நகை கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் கூடல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மதுரை மஸ்தான்பட்டி அரசு நகரைச் சேர்ந்தவர் செல்வம் (39). சம்பவத்தன்று செல்வம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார்.
இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் 2 பவுன் நகை, ரூ. 6 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பினர். அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.