செய்திகள்
கோப்பு படம்

நைனார்மண்டபத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2019-09-30 12:12 GMT   |   Update On 2019-09-30 12:12 GMT
நைனார்மண்டபத்தில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் நடல் நசுங்கி பலியானார்.
புதுச்சேரி:

தவளக்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான பெரிய காட்டுப்பாளையத்தை அடுத்த மதலப்பட்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது34). இவர் குருமாம்பேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை வீட்டில் இருந்து கண்ணதாசன் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

காலை 5.40 மணியளவில் நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகே வந்த போது பின்னால் வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த கண்ணதாசன் மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய கண்ணதாசன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுவை கிழக்குபகுதி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான கண்ணதாசனுக்கு திருமணமாகி 1½ வருடமே ஆகிறது. இவருக்கு சரண்யா என்ற மனைவியும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News