மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து 15 பவுன் கொள்ளை
மதுரை:
மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள அவுல்கார தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள நகை கடையில் விற்பனையாளராக உள்ளார்.
சம்பவத்தன்று காலை முருகன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர் நைசாக வீட்டுக்குள் புகுந்து பீரோவை திறந்தார். பின்னர் அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ. 1,000 ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினார்.
சிறிது நேரத்தில் வீடு திரும்பிய முருகனின் மனைவி பீரோவில் இருந்த நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவரை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் துணிகரமாக வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் நகையை திருடிச் சென்றது அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.