செய்திகள்
கிராம மக்களால் தாக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்.

பள்ளி வளாகத்தில் ஆசிரியரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2019-09-26 11:20 GMT   |   Update On 2019-09-26 11:20 GMT
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பள்ளி வளாகத்தில் ஆசிரியரை தாக்கிய வழக்கில் 2 பேரை போலீசார்கைது செய்தனர்.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்துள்ள எஸ்.உடுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆசிரியராக சரவணன் (வயது 35) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பள்ளி குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சரவணனை, பொதுமக்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சரமாரியாக தாக்கினர். மேலும் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

காயம் அடைந்த சரவணன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவர், தன்னை தாக்கியவர்கள் மீது புகார் கொடுத்தார். அதன்பேரின் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் எஸ்.உடுப்பம் பகுதியை சேர்ந்த நாமக்கலில் தனியார் டிரான்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் செல்வராஜ் (வயது 45) மற்றும் விவசாயி காளியண்ணன் (60) ஆகியோரை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரில் ஆசிரியர் சரவணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News