செய்திகள்
விபத்து

ராமேசுவரம் அருகே விபத்து- கணவன் கண்முன்பு காதல் மனைவி பலி

Published On 2019-09-26 10:05 GMT   |   Update On 2019-09-26 10:05 GMT
ஆட்டோ கற்றுக்கொள்ள முயன்ற போது விபத்தில் சிக்கி கணவன் கண்முன்பு மனைவி பலியானார்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ள வேர்க்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சேவியர். இவரது மகன் அமலபிரவீன் (வயது 23). இவரும் தெற்கு கரையூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகள் ராகவியும் (20) காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அமல பிரவீன் ஆட்டோ டிரைவராக உள்ளார்.

நேற்று இரவு ராகவி ஆட்டோ கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார். உடனே அமலபிரவீன் மனைவிக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுத்தார்.

வேர்க்கோட்டில் உள்ள ராமேசுவரம்- தனுஷ்கோடி ரோட்டில் ராகவி ஆட்டோ ஓட்டினார். பின்னர் அமலபிரவீன் வழிமுறைகளை கூறிக் கொண்டிருந்தார்.

நம்புகோவில் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராகவி சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். லேசான காயங்களுடன் அமலபிரவீன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக தனுஷ்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ராகவியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரின் தந்தை முனியசாமி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் அமலபிரவீனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணமாகி சில மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News