கன்னியாகுமரி அருகே கல்லூரி வகுப்பறையில் மாணவர் தற்கொலை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பிளாசியஸ் காங்கன். இவரது மகன் ஆரோக்கிய லவ்லிஸ் (வயது 19). கல்லூரி மாணவர்.
ஆரோக்கிய லவ்லிஸ் கல்லூரிக்கு செல்லும் வழியில் அந்த பகுதியில் உள்ள மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் அந்த மாணவிக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானது.
மாணவிக்கு திருமணம் நிச்சயமான தகவல் அறிந்த மாணவர் ஆரோக்கிய லவ்லிஸ் மனம் உடைந்தார். நேற்று கல்லூரிக்கு சென்ற ஆரோக்கிய லவ்லிஸ், வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதை கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். கல்லூரி ஆசிரியர்கள், ஆரோக்கிய லவ்லிஸ் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
உறவினர்கள் விரைந்து வந்து ஆரோக்கிய லவ்லிசை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஆரோக்கிய லவ்லிஸ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆரோக்கிய லவ்லிசின் தாயார் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.