செய்திகள்
விபத்து

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2019-09-11 09:07 GMT   |   Update On 2019-09-11 09:07 GMT
நாகர்கோவிலில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் சகோதரர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

கிருஷ்ணனின் மகன் ஆனந்த் (வயது 24). செல்போன் சர்வீஸ் செய்து கொடுக்கும் பணி செய்து வந்தார். நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து நண்பரின் வீட்டுக்கு சென்றார்.

இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால் ஆனந்த் நண்பர் வீட்டிலேயே தங்கிவிட்டார்.

இன்று அதிகாலை ஆனந்த் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே வந்த போது அந்த வழியாக சென்ற வாகனம் ஆனந்த் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அதிகாலை நேரம் என்பதால் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை யாரும் பார்க்கவில்லை. இதனால் அவர் உயிருக்கு போராடினார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த வழியாக வந்தவர்கள் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஆனந்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஆனந்த் பரிதாபமாக இறந்து போனார்.

இது பற்றி நாகர்கோவில் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் ஆனந்த் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது பற்றியும் விசாரித்தனர். இதற்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே ஆனந்த் இறந்த தகவல் அறிந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு சென்றனர். அவர்கள் ஆனந்த் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Tags:    

Similar News