செய்திகள்
கைது

விருதுநகரில் கல்வி அதிகாரி வீட்டில் கொள்ளையடித்தவன் கைது

Published On 2019-09-08 12:10 GMT   |   Update On 2019-09-08 12:10 GMT
கல்வி அதிகாரி வீட்டில் கொள்ளையடித்தவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 38 பவுன் நகை, ரூ.83 ஆயிரம் மீட்கப்பட்டது.

விருதுநகர்:

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி குறிஞ்சி தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது54). இவர் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக உள்ளார். இவரது மனைவி மஞ்சுளா, நந்திரெட்டியபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. மாலையில் வீடு திரும்பிய அவர்கள் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் வீட்டின் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. எனவே மர்ம நபர்கள் யாரோ வீட்டுக்குள் புகுந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து பாண்டியன் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 38 பவுன் நகைகள் மற்றும் ரூ.83 ஆயிரம் கொள்ளை போய் இருப்பதாக போலீசாரிடம் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் முன்பு நீண்ட நேரமாக ஒரு மோட்டார் சைக்கிள் நின்றதாக தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பெரிய பேராலியைச் சேர்ந்த கார்த்திக் (32) என்பவரது மோட்டார் சைக்கிள்தான் அங்கு நின்றது என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கார்த்திக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர் பின்னர் வீடு புகுந்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான். அவனை போலீசார் கைது செய்தனர்.

கோவிந்தராஜின் உறவினர் வீட்டில் கட்டிட வேலையின்போது கார்த்திக் பணியாற்றி உள்ளான். எனவே அவனுக்கு கோவிந்தராஜ் குடும்பம் பற்றி தெரிந்துள்ளது. ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து கைவரிசையை காட்டி உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவனிடம் இருந்து 38 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட கார்த்திக் வேறு ஏதும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளானா? என்பது குறித்து போலீஸ் உதவி சூப்பிரண்டு சிவபிரசாத் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News