திருவோணம்-சுவாமிமலையில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் டிரைவர் கைது
திருவோணம்:
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலி அக்னியாற்ளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம் பகுதிகளில் விற்கப்படுவதாக ஒரத்தநாடு தாசில்தார் அருள்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் தாசில்தார் அருள்ராஜ் மற்றும் வருவாய்துறையினர் கடந்த 2 நாட்களாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு திருவோணம் அருகே திப்பன்விடுதி பகுதியில் வேகமாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.
லாரியை சோதனையிட்ட போது திருட்டுத்தனமாக மணல் கடத்துதியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து திருவோணம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் கும்பகோணம்-அசூர் பைபாஸ் சாலையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வகுமார் தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரி டிரைவர் கீரனூர் ராஜி(28) என்பவரை பிடித்து சுவாமிமலை போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.