கொல்லங்கோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் கொள்ளை
நாகர்கோவில்:
கொல்லங்கோடை அடுத்த சூழால் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சுதாரம்மா (வயது 71).
இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டினுள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தது. சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.40 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரம் மற்றும் குத்துவிளக்குகளை கொள்ளையடித்துச் சென்று உள்ளது தெரியவந்தது.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு உடைக்கப்பட்ட இடம் மற்றும் பீரோ ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.