எண்ணூரில் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மறியல்
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட எண்ணூர் தாழங்குப்பம், நெட்டுகுப்பம், சின்னகுப்பம், உலக நாதபுரம், சத்தியவாணி முத்து நகர் போன்ற பகுதிகளில் நேற்று மாலை மின்சாரம் தடைபட்டது.
இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்கள் தூக்கமின்றி சிரமத்திற்குள்ளானார்கள். மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர்.
இரவு வெகு நேரமாகியும் மின்சாரம் வராததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அருகே கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதானம் பேசினர். 2 நாட்களாக இது போல் பலமணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறினர்.
மின்சாரம் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் உயர் மின்னழுத்த வயர் மற்றும் பில்லரில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். பின்னர் அப்பகுதி முழுவதும் மின்சாரம் வந்தது
இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .