திண்டுக்கல்லை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் சவேரியார் பாளையத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது22). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் மீது நகர் தெற்கு, வடக்கு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவரை கைது செய்ய போலீசார் பலமுறை முயன்றபோது தப்பி ஓடிவிட்டார். இதனால் அவரது கூட்டாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சவேரியார் பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் சூர்யா பதுங்கி இருப்பதாக நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேக்தாவூது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரைசுற்றி வளைத்தனர். பின்னர் சூர்யாவை கைது செய்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 8 மாதங்களுக்கு பிறகு சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.