செய்திகள்
ஆரணி அருகே கியாஸ் கசிந்து காரில் தீ
காரில் ஏற்பட்ட தீயால் ஆரணி- செய்யாறு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
ஆரணி:
ஆரணி அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் விவசாயி. இவர் தன்னுடைய நண்பர் ஜெய்கணேசுடன், வேலூருக்கு தன்னுடைய காரில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
ஆரணி அடுத்த நகரம் அருகே வந்த போது ஜெயகுமார் ஓட்டி வந்த காரில் இருந்த கேஸ் (எரிவாயு) கசிந்ததாக தெரிகிறது. ஓடிக்கொண்டு இருந்த காரில் கியாஸ் கசிந்ததால் கார் முழுவதும் மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஜெயகுமாரும் அவருடைய நண்பரும் உடனடியாக காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, காரில் இருந்து தப்பி வெளியேறினார்கள்.
தகவல் அறிந்த தீயனைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீயனைப்பு துறையினர்கள் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. காரில் ஏற்பட்ட தீயால் ஆரணி செய்யாறு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.