செய்திகள்
கைது

திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவி கற்பழிப்பு - வாலிபர் கைது

Published On 2019-08-15 09:35 GMT   |   Update On 2019-08-15 09:35 GMT
களியக்காவிளை அருகே திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை:

குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அந்த மாணவியின் உறவு பெண் ஒருவர் பிரசவத்திற்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த பெண்ணுக்கு உதவி செய்ய கல்லூரி மாணவியும் அவருடன் இருந்தார்.

அப்போது ஆஸ்பத்திரியின் பக்கத்து அறையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை பார்க்க கொல்லத்தை சேர்ந்த அனிஷ் என்ற வாலிபர் வந்து சென்றார்.

ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றதில் அனிசுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர், மாணவியிடம்தான் கம்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இதனை நம்பிய மாணவி, வாலிபர் அனிசுடன் நெருங்கி பழகினார். மாணவி ஊருக்கு வந்த பின்னரும், செல்போன் மூலம் அனிசுடன் பேசி வந்தார்.

இதில் மாணவிக்கும், அனிசுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசவும் தொடங்கினர். இதற்காக மாணவியை திருவனந்தபுரத்திற்கும் அனிஸ் அழைத்தார்.

திருவனந்தபுரம் சென்ற மாணவியை, அனிஸ் பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்றார். பின்னர் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அங்கு அந்த மாணவியை அனிஸ் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இச்சம்பவத்திற்கு பிறகு, வாலிபர் அனிசை மாணவி, தொடர்பு கொண்டால் அவர் மாணவியை மிரட்ட தொடங்கினார். மேலும் திருமணம் செய்யவும் மறுத்து விட்டார்.

இது பற்றி மாணவி, பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வாலிபரை தேடி கொல்லம் சென்றனர்.

அங்கு அனிசுக்கு திருமணம் ஆகி மனைவியும், குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மார்த்தாண்டம் அழைத்து வந்தனர். இங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News