செய்திகள்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களை படத்தில் காணலாம்.

தர்மபுரியில் பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டம்

Published On 2019-08-14 12:55 GMT   |   Update On 2019-08-14 12:55 GMT
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி:

மத்திய அரசு இந்திய மருத்துவ ஆணையத்தை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் இன்று தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 75-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் திடீரென்று வளாகத்திற்குள் திரண்டு வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

இதைத்தொடர்ந்து அந்த பயிற்சி டாக்டர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி பேரணியாக வந்தனர். பயிற்சி டாக்டர்கள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News