செய்திகள்
வேல்முருகன்

வல்லநாடு அருகே வக்கீல் கொலை - கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2019-08-13 08:30 GMT   |   Update On 2019-08-13 08:30 GMT
வல்லநாடு அருகே வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன் வேல் முருகன் (வயது 27), வக்கீல். இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் மற்றொரு சண்முகவேல் மகன் செல்வம் (29), விவசாயி.

வேல்முருகனின் வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தை வேல்முருகனும், செல்வமும் உரிமை கொண்டாடினர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் நடை பெற்றது. இதில் அந்த நிலம், வேல்முருகனுக்கு சொந்தமானது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

இதனை எதிர்த்து, செல்வம் நெல்லை கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வம் சமரச பேச்சுவார்த்தைக்கு வேல் முருகனை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வேல்முருகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முறப்ப நாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை தொடர்பாக செல்வம் உள்பட 3 பேர் தலைமறைவாகி விட்ட னர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக முறப்பநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் சுரேஷ், ரென்னீஸ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படை போலீசார் செல்வத்தை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

வக்கீல் வேல்முருகன் கொலை வழக்கில் தொடர்புடைய அதே ஊரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர், ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மகேஷ் (25) ஆகிய 2 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News