செய்திகள்
சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்

ஒகேனக்கல்லில் இன்று முதல் பரிசல் இயக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2019-08-06 13:07 GMT   |   Update On 2019-08-06 13:07 GMT
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால் சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
தருமபுரி:

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த மாதம் 2 அணைகளில் இருந்தும் 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்து வருகிறது.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீர் அளவினை அளவீடு செய்து வருகின்றனர்.

நேற்று ஒகேனக்கல்லுக்கு 5 ஆயிரத்து 100 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்றுகாலை சற்று சரிந்து 3 ஆயிரத்து 800 கனஅடியாக குறைந்து வருகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகமானதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 14 நாட்களாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் இன்று பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடையை நீக்கியது.

இதனால் இன்று காலை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசலில் சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் மெயின்அருவியில் எண்ணை மசாஜ் செய்து குளித்து விட்டு சென்றனர்.

தண்ணீர் குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் இன்று காலையிலேயே கூட்டம் குவிய தொடங்கியது. இதனால் மீன் வியாபாரம் சூடுபிடித்தது.
Tags:    

Similar News