செய்திகள்
மது விற்பனை

போடி பகுதியில் மது விற்பனை அமோகம்

Published On 2019-08-05 09:55 GMT   |   Update On 2019-08-05 09:55 GMT
போடி பகுதியில் மது, கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
மேலசொக்கநாதபுரம்:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசு மது விற்பனை செய்து வருகின்றது. மது குடிப்பதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் குறைக்கப்பட்டது.

மதியம் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்மே மது விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். போடி பகுதியிலும் டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கி வந்து வீடு, பார்களில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம், சில்லமரத்துப்பட்டி, மீனாட்சிபுரம், சிலமலை, குரங்கணி உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மது கிடைக்கிறது. இதனால் கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி மயங்கி விடுகின்றனர். இதனால் அவர்கள் குடும்பம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் 24 மணி நேரமும் மது, கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் கூலித்தொழிலாளர்கள் மற்றும் இளம்வயதினர் மது, கஞ்சாவுக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.

மது, கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்கும் போலீசார் அபராதம் மற்றும் எச்சரிக்கையுடன் அனுப்பி விடுகின்றனர். மீண்டும் அதே தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News