செய்திகள்
சாலையை கடக்க முயன்ற மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி
பர்கூர் அருகே சாலையை கடக்க முயன்ற மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வரமலை குண்டா, ஒப்பவாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் மான், காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், இந்த வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர், உணவு தேடி அடிக்கடி மான், கரடி உள்ளிட்டவை கிராம பகுதிகளுக்கு நுழைகின்றன. அவ்வாறு வெளியேறும் வனவிலங்குகள் அடிக்கடி வாகனங்கள் அடிப்பட்டும், நாய்கள் கடித்து இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 5 வயதுடைய பெண் மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக பலியானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனவர் அண்ணாத்துரை, வனக்காப்பாளர் சண்முக வடிவு மற்றும் வனத்துறையினர் இறந்த கிடந்த மானை மீட்டு, கிருஷ்ணகிரியில் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு கால்நடை மருத்துவர் மானின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு, வனத்துறையினர் வனத்துறை அலுவலக வளாகத்தில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.