கண்ணமங்கலம் அருகே பெண் அடித்துக் கொலை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் விளக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். டிரைவர். இவரது மனைவி விஜயா (வயது 40). கட்டிட வேலை செய்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு புறப்பட்டு சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் கேளூர் அருகே உள்ள குன்றுமேடு என்ற இடத்தில் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதனை கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தது விஜயா என்பது தெரிய வந்தது. உடலை மீட்ட போலீசார் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டி.எஸ்.பி. சுந்தரராஜ் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் பேசி வரவழைக்கபட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.
கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.