செய்திகள்
மரணம்

தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் சூப்பர்வைசர் பலி

Published On 2019-07-23 10:35 GMT   |   Update On 2019-07-23 10:35 GMT
தாராபுரம் அருகே நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் சூப்பர்வைசர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாராபுரம்:

தாராபுரம் அருகே உள்ள சூரிய நல்லூர் குப்பண்ணன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (48). இவர் அவினாசியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

தினமும் தாராபுரம் பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பஸ்சில் அவினாசி செல்வார்.

சம்பவத்தன்று காலை சுப்பிரமணி தனது மோட்டார் சைக்கிளில் தாராபுரம் பஸ் நிலையம் வந்து கொண்டிருந்தார். நஞ்சியம் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டு இருந்த போது நாய் குறுக்கே வந்தது.

உடனே சுப்பிரமணி பிரேக் போட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் காயம் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. அவரை உறவினர்கள் தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சுப்பிரமணியை பரிசோதித்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவர் மூளைச்சாவு அடையும் சூழ்நிலை இருப்பதாக கூறி அழைத்து செல்லும் படி தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு 11 மணிக்கு இறந்தார். இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News