செய்திகள்
தற்கொலை

கயத்தாறு அருகே இளம்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2019-07-22 07:45 GMT   |   Update On 2019-07-22 07:45 GMT
கயத்தாறு அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து கோவில்பட்டி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி பகுதியை சேர்ந்தவர் மருதப்பாண்டி மகன் மாடசாமி(வயது 31), விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேனி(25). இவர்களுக்கு திருமணமாகி 2½ வயதில் குழந்தை உள்ளது. கிருஷ்ணவேனிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக மாடசாமி சென்றுவிட்டார். வீட்டில் கிருஷ்ணவேனி மட்டும் தனியாக இருந்தார். கோவில் திருவிழாவுக்கு தன்னால் செல்ல முடியவில்லையே என்கிற மனவருத்தத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த மாடசாமி, தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தகவல் அறிந்து வந்த கயத்தாறு போலீசார் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி 3½ வருடங்களே ஆவதால் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. விஜயா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News