செய்திகள்
சந்திரயான்-2 விண்கலம்

கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்

Published On 2019-07-18 01:11 GMT   |   Update On 2019-07-18 01:11 GMT
கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்; நிலவின் தென் துருவ பகுதியில் இது ஆராய்ச்சி நடத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:

நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘இஸ்ரோ’ மேற்கொண்டுள்ள கனவு திட்டம், ‘சந்திரயான்-2’ ஆகும்.

இந்த ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15-ந் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்த நிலையில் திடீரென அதிகாலை 1.50 மணிக்கு தொழில்நுட்ப காரணங்களால் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை விண்ணில் செலுத்துவது நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் இணைந்து பணியாற்றி சரி செய்து விட்டதாக ‘இஸ்ரோ’ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் அடுத்த வாரம் (20-ந் தேதி முதல் 23-ந் தேதிக்குள் ஒரு நாளில்) விண்ணில் செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறின. 
Tags:    

Similar News