செய்திகள்
சென்னையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

இடி, மின்னலுடன் சென்னையை குளிர்வித்த மழை

Published On 2019-07-15 22:23 GMT   |   Update On 2019-07-15 22:23 GMT
சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்து குளிர செய்தது. சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
சென்னை:

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, வட கடலோர மாவட்டமான சென்னையில் வெப்பசலனம் காரணமாக நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று இரவு 7.45 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.

சென்னை எழும்பூர், வேப்பேரி, கொடுங்கையூர், பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திரு.வி.க. நகர், அடையாறு, திருவான்மியூர் உள்பட சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.

அதேபோல், சென்னையின் பிறபகுதிகளான நுங்கம்பாக்கம், அண்ணாநகர், போரூர், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, ராயபுரம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

சென்னையில் நேற்று திடீரென்று மழை பெய்ததால், பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. சாலை ஓரங்களில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். நேற்று இரவு வரை மழை பெய்து கொண்டே இருந்தது.

சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மழை பெய்தது. அதன்பிறகு, தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று பெய்த மழையால் சென்னை ஓரளவுக்கு குளிர்ந்தது. சென்னையை போலவே, புறநகர் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.

வெப்பசலனம் காரணமாக சென்னையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News