செய்திகள்
சாத்தூரில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சாத்தூரில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்:
சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை கலெக்டர் சிவஞானம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக வருவாய்த்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான சாலை விபத்து நிவாரண உதவித்தொகைக்கான காசோலைகளையும், 3 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை சான்றுகளையும், 9 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதலுக்கான உத்தரவுகளையும், 9 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதலுக்கான (முழுப்புலம்) உத்தரவுகளையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து உள்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.