செய்திகள்
கொள்ளை

மன்னார்குடியில் வீட்டின் பீரோவை உடைத்து 15 பவுன்-300 கிராம் வெள்ளி கொள்ளை

Published On 2019-07-07 17:05 GMT   |   Update On 2019-07-07 17:05 GMT
மன்னார்குடியில் அரசு அதிகாரி வீட்டில் நகை- வெள்ளி கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாயார் நகரை சேர்ந்தவர் ரகுநாதன். இவர் புதுக்கோட்டையில் சுகாதாரத்துறையில் சூப்பிரண்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தாமரைச்செல்வி. இவர் திருவாரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவில் மர்ம கும்பல் நைசாக பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் ரகுநாதன், தாமரைச்செல்வி ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினர். 

இதையடுத்து மற்றொரு அறைக்கு சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்தனர். அதில் இருந்த 15 பவுன் நகை, மற்றும் 300 கிராம் வெள்ளி, ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பிறகு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இன்று காலை ரகுநாதன் கண் விழிந்து எழுந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு நகை- வெள்ளி- பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி மன்னார்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

ரகுநாதன் வீட்டில் உள்ள சிசிடிவி கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் 2 பேர் வீட்டுக்குள் நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதை வைத்து அவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News