செய்திகள்

திருவோணம் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி

Published On 2019-06-19 04:37 GMT   |   Update On 2019-06-19 04:37 GMT
திருவோணம் அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

திருவோணம்:

தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை மற்றும் மான்கள் உள்ளிட்டவை பொது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

முத்துப்பேட்டை பகுதியில் அலையாத்தி காடுகளில் வசித்து வரும் வன விலங்குகள் சில நேரங்களில் திருவோணம் பகுதிகளுக்கு சென்று விடுகின்றன.

கோடை காலத்தையொட்டி வனப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை தேடி வன விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து விடுகின்றன.

இந்த நிலையில் தண்ணீரை தேடி வந்த ஒரு புள்ளிமானை தெருநாய்கள் சேர்ந்து கடித்து குதறியதில் பரிதாபமாக இறந்தது.

திருவோணம் அரசு பள்ளி எதிரே இன்று காலை புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், திருவோணம் போலீசாருக்கும்,வனத்துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள் இறந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் தண்ணீரை தேடி வந்த புள்ளிமானை, அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் கடித்து குதறியதில் அது பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது.

மேலும் பள்ளி அருகே புள்ளிமான் இறந்து கிடந்ததை மாணவர்களும் சோகத்துடன் பார்வையிட்டு சென்றனர்.

Tags:    

Similar News