செய்திகள்

முதல் மனைவியுடன் சேர்ந்து 2-வது மனைவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் கைது

Published On 2019-06-18 12:18 GMT   |   Update On 2019-06-18 12:18 GMT
கவுண்டம்பாளையம் அருகே முதல் மனைவியுடன் சேர்ந்து 2-வது மனைவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 49). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வசித்து வந்தார். அப்போது அங்கு வசித்து வந்த கலா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய ஆறுமுகம் முதல் திருமணம் ஆனதை மறைத்து ஜெயபாரதி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் பெயரில் வீடு ஒன்றை வாங்கி கொடுத்து வசித்து வந்தார்.

இந்தநிலையில் ஆறுமுகத்தின் 2-வது மனைவி ஜெயபாரதி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது

எனக்கும் ஆறுமுகத்துக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது அவர் எனது பெயரில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி கொடுத்தார். அதன் பின்னர் தான் ஆறுமுகம் முதல் திருமணம் ஆனதை மறைத்து 2-வதாக என்னை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கேட்ட போது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

தற்போது ஆறுமுகத்தின் முதல் மனைவி கலா என்னிடம் வந்து வீட்டை விட்டு வெளியேறு என்று என்னை தாக்கி தொந்தரவு செய்து வருகிறார். இதற்கு ஆறுமுகமும் உடந்தையாக இருந்து வருகிறார். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம் பிகை வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கலாவை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News