செய்திகள்
சூளகிரி அருகே ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரிழந்த வடமாநில வாலிபர்
சூளகிரி அருகே விபத்தில் வடமாநில வாலிபர் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை தூக்கி செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தபால் நிலையம் அருகே 37 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக வாலிபர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் ஏற்பட்டு அவர் உயிருக்கு போராடி துடிதுடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரம் ஆனதால் விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான வடமாநில வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தில் இறந்த வடமாநில வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.