செய்திகள்
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம்- ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு
தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து தமிழக அரசுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று வக்கீல் முறையிட்டுள்ளார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர்.
அப்போது வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி கூறியதாவது:-
‘தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் இரவும், பகலுமாக தண்ணீர் குடத்தை தூக்கிக் கொண்டு, தண்ணீருக்காக அழைகின்றனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்யவேண்டும். தமிழக அரசுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.’
இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ஏற்கனவே ஒரு வழக்கில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அரசு பதில் அளித்ததும் தகுந்த உத்தரவை பிறப்பிப்போம்’ என்று கூறினர்.