செய்திகள்

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி

Published On 2019-06-15 05:52 GMT   |   Update On 2019-06-15 05:52 GMT
அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக சசிகலாவின் உறவினர் இளவரசியின் மருமகன் பெயரில் ரூ.5 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் சேலத்தைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

நான் 2016-ம் ஆண்டு வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பினேன். அப்போது ராஜேந்திரன் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் சசிகலாவின் உறவினர் இளவரசியின் மருமகன் என்று கூறினார்.

அதை நம்பிய நான் எனக்கு அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. சீட்டு வாங்க சிபாரிசு செய்யும் படி கேட்டேன். அதற்கு அவர் ரூ.5 கோடி கொடுத்தால் நிச்சயம் சீட் வாங்கித் தருவதாக கூறினார்.

அதை நம்பிய நான் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பூங்காவில் வைத்து 2 தவணையாக ரூ.5 கோடி கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்துவிட்டார். எனவே சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி இருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முடிவில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகி உரிய தீர்வு பெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Tags:    

Similar News