செய்திகள்
கள்ளத்துப்பாக்கி தயாரித்து கைதான 2 பேர் சேலம் சிறையில் அடைப்பு
தளி அருகே கள்ளத்துப்பாக்கி தயாரித்து கைதான 2 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே முனிசேநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சாசாரி (வயது 75). இவர் ரகசியமாக கள்ளத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்து வருவதாக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று மாலை சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், நஞ்சாசாரி வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் தனியாக உள்ள ஒரு அறையில் கள்ளத்துப்பாக்கி தயாரிப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தி கள்ளத் துப்பாக்கி ஒன்றும், வயர் கம்பிகள் மற்றும் உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளத் துப்பாக்கி தயாரிக்க அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜன் மகன் குபேந்திரன் (22) என்பவர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கள்ளத் துப்பாக்கியை தளி போலீசில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து 2 பேர் மீதும் தளி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.