திண்டுக்கல் ரெயில் நிலைய பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளால் பயணிகள் அவதி
திண்டுக்கல்:
தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக திண்டுக்கல் ரெயில் நிலையம் உள்ளது. தினசரி 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் தேனி மாவட்டத்தில் இருந்தும் பஸ்களில் வரும் பயணிகள் திண்டுக்கல்லில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ரெயில்கள் மூலம் சென்று வருகின்றனர்.
இதனால் ஏராளமான பயணிகள் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வருகின்றனர். நாகல்நகர் பாலத்தின் அடியில் இருந்து ரெயில் நிலையம் வழியாக ரெயில் திருமண மண்டபம் தாண்டி செல்லும் சாலை சிதைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ரெயில் நிலைய சாலை பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் செப்பணிடும் பணி கூட நடக்கவில்லை. இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. இந்த சாலை வழியாகவே அமைச்சர்கள், அதிகாரிகள் சென்று வருகின்றனர். ஆனால் இன்று வரை இந்த சாலைக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் ரெயில் நிலையத்தில் இருந்து நேராக வீட்டுக்கு செல்பவர்களை விட ஆஸ்பத்திரிக்கு செல்பவர்களே அதிகமாக உள்ளனர்.
மேலும் பாலத்தின் அடியில் தனியார் பள்ளி உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகளை வாகனங்களில் அழைத்து வரும் தாய்மார்கள் விபத்தில் சிக்கி வருவதால் ஒரு வித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
எனவே அதிகாரிகள் ரெயில் நிலையம் முன்புறம் உள்ள இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.