செய்திகள்
நீதிபதி விலகியதால் ஸ்டெர்லைட் வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம்
வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, ஸ்டெர்லைட் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
சென்னை:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்தாண்டு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் பட்டியலிட்டிருந்தது.
இதனிடையே, ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை அமர்வில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகுவதாக இன்று காலை திடீரென அறிவித்தார். வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவும் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சசிதரன் பரிந்துரை செய்திருந்தார்.
இதேபோல் ஸ்டெர்லைட் வழக்கில் இருந்து நீதிபதி சசிதரன் விலகியதால், இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடுமாறு தலைமை நீதிபதியிடம் வேதாந்தா நிறுவனமும் கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கை நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.