செய்திகள்

ஓசூர் ஆவலப்பள்ளி ஏரிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

Published On 2019-06-10 18:24 GMT   |   Update On 2019-06-10 18:24 GMT
ஓசூர் ஆவலப்பள்ளி ஏரிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
ஓசூர்:

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆவலப்பள்ளி ஏரி உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆவலப்பள்ளி ஏரி நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்தநிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவில் வெளிநாட்டு பறவைகள் ஏரிப்பகுதியில் குவிந்துள்ளன. ஆண்டுதோறும் இந்த ஏரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகள், 2 மாத காலம் ஏரியில் முட்டையிட்டு குஞ்சு பொரித்த பின்பு மீண்டும் சென்று விடும். தற்போது இங்கு முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள், வெள்ளை, கருப்பு, பிங்க் நிறங்கள் கலந்ததாகவும், கால்கள், அலகுகள் நீண்டு உயரமாக அழகாக காணப்படுகின்றன.

ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஏரிக்கு வந்து வெளிநாட்டு பறவைகளை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்தாண்டு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் அவற்றை காண பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக ஆவலப்பள்ளி ஏரி, சுற்றுலா தலம் போல் காட்சி அளிக்கிறது.
Tags:    

Similar News