செய்திகள் (Tamil News)

ராமநாதபுரத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை

Published On 2019-05-22 09:46 GMT   |   Update On 2019-05-22 09:46 GMT
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தொழிலாளியை விரட்டிச் சென்று படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் நாகநாதன் (வயது 32). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

ராமநாதபுரம் பழைய பஸ் நிலையப்பகுதியில் இன்று பிற்பகல் 11 மணியளவில் நாகநாதன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 மர்ம நபர்கள் நாகநாதனை கொலை செய்ய முற்பட்டனர். இதைப்பார்த்த நாகநாதன் அவர்களிடம் தப்பிப்பதற்காக ஓடினார்.

ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று பிடித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அவர் இறந்ததை உறுதி செய்தபின் அந்த கும்பல் சர்வ சாதாரணமாக அங்கிருந்து சென்றது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலையால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகநாதன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News