செய்திகள்

திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2019-05-21 17:14 GMT   |   Update On 2019-05-21 17:14 GMT
திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 53). இவர் திருப்பூர் அங்கேரிப்பாளையத்தில் தங்கியிருந்து கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி காலை கட்டிட பணிக்காக 60 அடி ரோடு சந்திப்பில் உள்ள பூங்கா அருகே தனது மோட்டார் சைக்கிளில் ஆரோக்கியசாமி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர்கள் ஆரோக்கியசாமியை மறித்து கத்தியால் அவரை குத்தி கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளிகளான அறிவழகன்(35), பாப்பாபட்டியை சேர்ந்த ஆனந்த்(30) ஆகிய 2 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். ஆரோக்கியசாமிக்கும், அறிவழகனுக்கும் தொழில் போட்டியால் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அறிவழகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரோக்கியசாமியை தீர்த்துக்கட்டியதாக போலீசில் தெரிவித்தார்.

இந்த கொலை சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர். கடந்த 18-ந் தேதி சாமுண்டிபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன்(40) என்பவரை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சாமுண்டிபுரம் நேருஜி நகரை சேர்ந்த சண்முகம்(38) என்பவரை வடக்கு போலீசார் நேற்று இரவு திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு கைது செய்தனர். விசாரணையில் ஆரோக்கியசாமியை கொலை செய்ய சண்முகம் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சண்முகத்தை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News