செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதி பெண் உயிரிழப்பு

Published On 2019-05-18 12:40 GMT   |   Update On 2019-05-18 12:40 GMT
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை  அருகே ஒசட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா (வயது53). இவரது மனைவி பாக்கியம்மா. தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகே ராஜப்பா வாழை இலை கடை நடத்தி வருகிறார். இவரும் அவரது மனைவி பாக்கியம்மாவும் நேற்று மாலை தேன்கனிக்கோட்டை அருகே கிரியானபள்ளியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் வாழை இலை அறுத்து விட்டு பின்னர் அங்கிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் கடைக்கு திரும்பி வந்தனர்.

அப்போது சாலிவாரம் கூட்ரோடு அருகே அஞ்செட்டி நோக்கி வந்த மினிவேன் ஒன்று ராஜப்பா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்ட பாக்கியம்மா தலையில் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜப்பா படுகாயம் அடைந்தார். அப்போது மினிவேனை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். 

இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக் கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த பாக்கியம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

காயமடைந்த ராஜப்பாவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மினிவேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News