கொடைக்கானலில் 9-ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே உள்ள மலை கிராமமான புளியன்கோம்பையில் 9-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் 37 வயதுடைய ஆணுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சைல்டு லைன் குழுவினர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஞ்சனா, கிராம சேவகர் சந்திரா, குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஆகியோர் புளியன்கோம்பை கிராமத்துக்கு சென்றனர்.
மாணவியின் பெற்றோரிடம் 18 வயதுக்கு குறைந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் குற்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எடுத்துரைத்து அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.
18 வயது நிரம்பாமல் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் சைல்டு லைன் அமைப்பின் துணை மைய இயக்குனர் ராஜா முகமது தெரிவிக்கையில் சிறுமிக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு 18 வயது வரை சைல்டு லைன் பாதுகாப்பில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி இடை நிற்றல் குழந்தைகளால்தான் பெரும்பாலும் இளம் வயது திருமணங்கள் நடக்கிறது. இது குறித்து மலைகிராமங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.