செய்திகள்

மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது

Published On 2019-03-18 10:33 GMT   |   Update On 2019-03-18 10:33 GMT
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை அனுப்பானடி நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது53). இவர் அனுப்பானடி பஸ் நிலைய பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். ஜெயக்குமார் நேற்று காலை அதே பகுதியில் நடந்து சென்றார். அப்போது அம்பேத்கார் தெருவைச் சேர்ந்த போஸ் மகன் பிரவீன்குமார் (வயது20), தெய்வக்கனி தெருவைச் சேர்ந்த மச்சக்காளை மகன் மதியழகன் (21) ஆகியோர் மது குடிக்க பணம் தருமாறு ஜெயக்குமாரிடம் கேட்டனர். அவர் தரமறுக்கவே 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமார், மதியழகனை கைது செய்தனர்.

சிம்மக்கல் முத்து இருளாண்டி தெருவைச் சேர்ந்தவர் கோபி (34). இவர் நேற்று மதியம் கூடல்நகர்- பாலமேடு மெயின்ரோட்டில் நடந்து சென்றார். அப்போது கே.புதூர் சிங்காரவேலர் தெருவைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். கோபி இல்லை என கூறவே கொலை மிரட்டல் விடுத்து ரமேஷ்குமார் தப்பினார்.

இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர்.

எஸ்.எஸ்.காலனி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (37). டாக்டரான இவர் நேற்று மதியம் வீட்டு முன்பு செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென்று அருண் குமாரை சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினார். அதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

மதுரை நகரில் நாள் தோறும் இதுபோன்று வழிப்பறிகள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. ஆனால் போலீசார் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். வழிப்பறி, நகை பறிப்பு சம்பவங்களால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் வெளியில் நடமாடவே அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News