செய்திகள்
மெஞ்ஞானபுரம் அருகே வீடு புகுந்து 8 பவுன் தங்க நகை கொள்ளை
மெஞ்ஞானபுரம் அருகே வீடு புகுந்து 8 பவுன் தங்க நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள அருளானந்தபுரம் வாலிவிளையைச் சேர்ந்தவர் ஜஸ்டின்பவுல் (வயது 45) அறுவடை இயந்திர வாகன டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஸ்டெல்லா(40). வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்தபோது மர்ம நபர் ஒருவர் இவர் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து ஓடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஸ்டெல்லா மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.