செய்திகள்
ஜேடர்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தையல் தொழிலாளி கைது
ஜேடர்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தையல் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே குறும்பலமாகாதேவியை அடுத்த நாயக்கனூரை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஈரோடு அசோக் நகரை சேர்ந்த ரமேஷ் (25) என்ற தையல் தொழிலாளி, நாயக்கனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது அந்த மாணவிக்கும், ரமேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
கடந்த 28-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தனர். மாலை வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன மாணவியை ஜேடர்பாளையம் போலீசார் ஈரோடு பகுதியில் மீட்டனர். அவரை கடத்தி சென்றதாக ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.