செய்திகள்

வருகிற 26-ந்தேதி பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது அதிகாரி தகவல்

Published On 2019-02-24 18:25 GMT   |   Update On 2019-02-24 18:25 GMT
பாம்பன் ரெயில் பாலத்தில் வருகிற 26-ந்தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று முழுமையாக முடிவடைந்துள்ளன. ஆனால் இதுவரை பாம்பன் ரெயில் பாலம் வழியாக பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இந்தநிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை நேற்று தெற்கு ரெயில்வேயின் உதவி தலைமை பொறியாளர் ஸ்ரீகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. ரெயில் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துவிட்டதால் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டிய பாலமாகும். அதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புகளில் துருப்பிடிக்காமல் இருக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை அலுமினிய பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தூக்குப்பாலம் மிகவும் பழமையாகி விட்டதால் இனி மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெயிண்ட் அடிக்க முடிவு செய்துள்ளோம்.

புதிய ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்படும் வரை தற்போது உள்ள ரெயில்வே பாலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும்.

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து பாதுகாப்பாக உள்ளது. எனவே அந்த பாலத்தில் வருகிற 26 அல்லது 27-ந்தேதி முதல் மீண்டும் ராமேசுவரத்திற்கு பயணிகளுடன் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News