செய்திகள்

கல்லூரி மாணவி உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2019-02-03 16:47 GMT   |   Update On 2019-02-03 16:47 GMT
குன்னம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள இலுப்பக்குடியை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகள் கவுசல்யா (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வந்தார். கவுசல்யா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த கவுசல்யாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். 

இதனை கண்ட அவரது குடும்பத்தினர் கவுசல்யாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் குன்னம் அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சுசிலா(34). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சுசிலா நேற்று விஷம் குடித்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அதே பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுசிலா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News