செய்திகள்

திருச்சி அருகே குடிபோதையில் தாயை கொன்ற மகன்

Published On 2019-02-02 05:23 GMT   |   Update On 2019-02-02 05:23 GMT
திருச்சி அருகே குடிபோதையில் தாயை மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தா.பேட்டை:

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள திருத்தலையூர் பஞ்சாயத்து அலுவலக பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 60). இவரது மகன் ராஜா (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்ததால் , ராஜா தனது தாய் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜா, மனைவியை பிரிந்ததோடு, தனது தாயை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான திருத்தலையூருக்கு வந்து விட்டார். அங்குள்ள வீட்டில் தாயுடன் வசித்து வந்தார்.

இதனிடையே ராஜாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் மது குடித்துவிட்டு வந்து தாயுடன் தகராறு செய்து வந்தார். நேற்றிரவும் குடிபோதையில் வந்து பச்சையம்மாளுடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ராஜா,வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, தாய் என்றும் பாராமல் பச்சையம்மாளை சரமாரி வெட்டினார். இதில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து இரவு முழுவதும் தாயின் உடல் அருகேயே இருந்த ராஜா, இன்று காலை எழுந்து பக்கத்துவீட்டுக்காரர்களிடம், தனது தாய் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. என்னவென்று வந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து அருகில் வசித்து வந்தவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கொலை செய்யப்பட்ட நிலையில் பச்சையம்மாள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி பொதுமக்கள் ராஜாவிடம் கேட்டபோது, குடிபோதையில் இருந்ததால் தனது தாயை வெட்டியது தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

உடனே இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தாயை மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News