ராஜபாளையம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 17 பெண்கள் காயம்
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 17 பெண்கள் விவசாய வேலைக்கு சென்றனர். சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேடகத்தில் வேலை பார்க்க அவர்கள் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜகோபால் (வயது30) என்பவர் வேனை ஓட்டிச்சென்றார். ஜமீன் கொல்லம்கொண்டான் விலக்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் சென்ற 17 பெண்களும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சேத்தூர் புறக்காவல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பணிகளை துரிதப்படுத்தினார்.
இதில் பஞ்சனை, சின்னப் பொன்னு, லட்சுமி, பிச்சையம்மாள், மஞ்சு உள்பட சிலர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.