செய்திகள்

ஊட்டி நகரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

Published On 2019-01-11 13:07 GMT   |   Update On 2019-01-11 13:07 GMT
உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து ஊட்டி நகர பகுதிகளில் இயங்கிவரும் சாலையோர உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் விற்கப்படும் சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்

ஊட்டி:

ஊட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து ஊட்டி நகர பகுதிகளில் இயங்கிவரும் சாலையோர உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் விற்கப்படும் சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆய்வில் பலகாரம் செய்ய மறுசுழற்சி செய்யப்பட்ட எண்ணை 5 லிட்டர், கலப்படம் மற்றும் சாயம் கலந்த டீ தூள்கள் 2 கிலோ மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் 500 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு, மேலும், இவ்வாறு கண்டறியப்பட்ட கடைகளுக்கு எல்லாம் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.

மேலும் இனிவரும் காலங் களில் ஆய்வு செய்யும் போது ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் திரும்ப பயன்படுத்துவது தெரியவந்தாலோ, நெகிழி பைகள், உண்ணத்தகாத பழைய உணவுகள், பலகாரங்கள் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த பழங்கள் விற்பனை செய்வது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டாலோ விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அறிவுரை வழங்கப்பட்டது. இவ் ஆய்வானது தொடர் நடவடிக்கையாக ஊட்டி நகராட்சி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் கண்காணிக்கப்படும்.

தொடர்ந்து தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் கடையின் உரிமம், பதிவு ரத்து செய்யப்படும். மேலும் கலெக்டருக்கு தெரிவிக்கப் பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு மேல் நடவடிக்கை எடுக்கப் படுமென மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்புத்துறையால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இதுபோன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போலி கலப்பட டீ தூள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவின் தரம்குறித்த புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கும், மாவட்ட கலெக்டரின் புகார் எண்ணான 9943126000 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News